லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அஜித் ஆதிக் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. அந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைத்தாற் போல இருந்தது.

அதற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படம் மொத்தமாக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இதே கூட்டணிதான் மீண்டும் இணைகிறார்கள். தற்போதுதான் அஜித் சென்னைக்கு வந்திருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜெண்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் விருது வழங்கி கௌரவித்தார்கள்.

ரேஸ் எல்லாம் முடிந்து இன்று சென்னை திரும்பிய அஜித் அடுத்தக்கட்ட வேலையாக தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அஜித்திடம் லோகேஷ் கதை சொல்லியிருப்பதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது லோகேஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்து யாரை வைத்து லோகேஷ் இயக்குவார் என்ற கேள்வி இருந்த நிலையில் அஜித்துடன் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜூனிடமும் அவர் கதை சொல்லியிருக்கிறார். அல்லு அர்ஜூன் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிய கிட்டத்தட்ட அடுத்த வருட இறுதி ஆகும்.

அதுமட்டுமில்லாமல் கைதி 2 படத்திற்கும் இப்போது வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கைதி 2க்காக கார்த்தி நீண்ட நாள்களாக காத்திருந்தும் லோகேஷ் பெரிய நடிகர்களின் படங்கள் இருக்கிறது என்பதை காரணம் காட்டியே கார்த்தியை தட்டிக் கழித்திருக்கிறார். அது கார்த்திக்கு ஈகோ பிரச்சினையாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.அதனால் கைதி 2க்கு இப்போது வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.